12.13.2007

அம்மா! அம்மா! அம்மா!


ரத்தத்தில் நனைந்து வந்த
என்னை முத்தத்தால் நனைத்த
உன் இதழ்களில்
முதல் முறை என் பெயரை
எப்பொழுது உச்சரித்தாயோ
அன்றிலிருந்து இன்று வரை
அந்த குரலில் கலந்து வரும்
உரிமையை உணர் வை
வேறு எந்த குரலிலும்
நான் உணர்ந்ததில்லை
உன் விரல் பட்ட உணவில்
தான் நான் உயிர் வளர்த்தேன்
உன் இதழ் சிந்திய வார்த்தையை
உச்சரித்துத் தான் மொழி பழகினேன்
உன் சுவாசத்தில் கலந்த காற்றை
சுவாசித்து தான் வாழ்ந்திருக்கேன்
முதல் நடந்திடும் நான்
விழுந்தது உன் மடியில்
முதல் மொழியினை நான்
உணர்ந்தது உன் இதழில்
முதல் கலங்கிடும் விழிகளை
துடைத்தது உன் உடையில்
முதல் சிரிப்பினை பழகியது
உன் முகத்தில்
கண்ணாடிப் பார்க்கும் வரை
என் அத்தனை முகங்களும் நீயே
உன் முன்னாடி இருப்பதை விட
வேறு இன்பமில்லை தாயே
என் நிர்வானத்தை முதலில்
களைத்த நீயே
நீல வானத்தையும் காட்டி
வளர்த்தாய் தாயே
மூச்சு விடும் இடைவெளியிலும்
உன் அன்பு எனை
விட்டு விலகியதில்லை
நீ காட்டி வளர்த்த
ஒவ்வொரு பொருளும்
இனி வேறெங்கும் காண்பதற்கில்லை
கையெடுத்து நீ கும்பிடச்
சொன்ன தெய்வமோ
எனக்கு தலை சீவிவிட்டதில்லை
நானும் பொய்யுரைத்தப் பொழுதும்
கூட நீ எனை அடித்ததில்லையே
குளிப்பாட்டி விடும் உன் கைகளில்
அடி வாங்கஅடம் பிடிப்பேன்
உன்னிடம் அடி வாங்காமல்
உன்னன்பின் ஆழம் புரிவதில்லை
என்பேன்
கிறுக்கித் தான் அம்மா
உன் கைகளை பிடித்து
எழுத துவங்கினேன்
அன்பை சுருக்கி வாழும்
இதயங்களின் நடுவே
உறவுகளை பெருக்கி வாழும்
உன்னுடைய நேசத்தில் நெகிழ்ந்தேன்
அணுஅணுவாய் என் வளர்ச்சியை
ரசிப்பாய் ஒரு கைப்பிடி சோறு
குறைந்தாலும் உள்ளம் துடிப்பாய்
என்றைக்கும் உன் சேலை நுனி தான்
என்னுடைய கை குட்டை
உன் முகமே நான் முகம் பார்த்து
தலை சீவும் கண்ணாடி
உன் வாயில் புத்திசாலி என்று கேட்பதை
விட முட்டாள் என்று செல்லமாக கேட்பதையே
நான் விரும்புகிறேன் தாயே
சட்டை பையில் கை விடும் பொழுதெல்லாம்
எனக்கு தெரியாமல் நீ
வைத்த ஒரு ரூபா தலை நீட்டும்
அந்த சுகம் இன்று எந்த
ஆயிரம் லட்சங்களிலும் கிடைப்பதில்லை
உன் விரல் நுனியின் சுவையை
எந்த நட்சத்திர ஹோட்டலிலும்
உணர்ந்ததில்லை
உன் மடியின் சுகத்தை எந்த
பஞ்சு மெத்தையும் தந்ததில்லை ......... அம்மா!
சத்தியமாய் உன்னைப் போல் ஒரு பிரிவை
இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை




அம்மா !உன் நினைவுகள்





உன் நினைவுகள் படாத
ஒரு பொருளை வீட்டில்
என்னால் காட்ட முடியாது அம்மா!
நீ கட்டிய சேலை
என் தலையணையாக மாறியது.
நீ என் கையைப் பிடித்து
கற்றுத் தந்த மொழிகள்
இன்று கவிதைப் படைக்கிறது
நீ முதன்முதலில் வாங்கிய
உப்புக்கான டப்பாவைப் பார்க்கையில்
உன் கைகளின் சுவை
இன்றும் நாவில் நிற்கிறது
நீ சொல்லித் தந்தபடி
நான் விதைத்த கத்திரி
இன்று நம் வீட்டுக் குழம்பில்
கமகமக்கிறது.
இப்படி வீட்டில்
நீ கட்டிய பந்தலில்
வளர்ந்த அவரக்காய்,மல்லிப் பூ.
வளருமா? என்று நினைத்த வாழைமரம்
என எல்லாவற்றையும் நம்
வீட்டிற்கு வருபவர்களிடம்
நான் காட்டுகிறேன்.

உன் அம்மா எங்கே? என்பவர்களிடம்
இதோ என் அம்மாவென்று
உன் புகைப்படத்தைக்
காட்டவைத்துச் சென்று விட்டாயே!
அம்மா !

Popular Posts